search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசிமேடு துறைமுகம்"

    • லெதர் ஜாக்கெட் மீன்களை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.
    • மீன்களில் இருக்கும் தோல்களை வைத்து கோட், தொப்பி போன்றவற்றை வெளிநாட்டில் இருப்பவர்கள் செய்து வருகிறார்கள்.

    ராயபுரம்:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் 700 விசைபடகுகள் இருக்கின்றன. இதில் கடந்த ஜூலை மாதம் முதல் நேற்று வரை மீனவர்கள் வலையில் லெதர் ஜாக்கெட் மீன்கள் டன் கணக்கில் சிக்கியது.

    இந்த லெதர் ஜாக்கெட் மீன்கள் எப்போதும் 100 டன் வரையே கடலில் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு மொத்த விசைப் படகுகளில் சேர்த்து 1 லட்சம் டன் லெதர் ஜாக்கெட் மீன்கள் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு ரூ.30 கோடி.

    இந்த லெதர் ஜாக்கெட் மீனை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். லெதர் ஜாக்கெட் மீனை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

    அந்த மீன்களின் தோல் கோட், தொப்பி போன்றவற்றை செய்ய பயன்படுகிறது. இதுபற்றி மீனவர் சங்க துணை தலைவர் அருள்குமார் கில்பர்ட் கூறியதாவது:-

    லெதர் ஜாக்கெட் மீன்களை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இந்த மீன்களில் இருக்கும் தோல்களை வைத்து கோட், தொப்பி போன்றவற்றை வெளிநாட்டில் இருப்பவர்கள் செய்து வருகிறார்கள். இந்த மீனை கிலோ ரூ.300 என்ற விலையில் ஏற்றுமதி செய்கிறோம்.

    காசிமேட்டில் இருந்து கொச்சினுக்கு அனுப்பி விடுவார்கள். அங்கிருந்து அதிகப்படியாக ஏற்றுமதி செய்கிறார்கள். பின்னர் காசிமேடு மீனவர்கள் ஏஜெண்டுகள் மூலமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

    எப்போதுமே இந்த மீன்கள் 100 டன் அளவில் தான் கிடைக்கும் ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நேற்று வரை 1 லட்சம் டன் கணக்கில் கிடைத்தது இதுவே முதல்முறை. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த மீனின் தோல் வடிகட்டிகள் தயாரிக்க பயன்படுகிறது. தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மற்றபடி, சென்னையிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்த மீனுக்கு அதிக கிராக்கி இல்லை. சில ஓட்டல்களில், 'பிஷ் பிங்கர்' தயாரிக்க, இதை வாங்குகின்றனர் என்றனர்.

    • கடந்த மாதம் புரட்டாசி என்பதால் மீன் விற்பனை மந்தமானது.
    • காசிமேட்டில் 2 மாதத்துக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் 50 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது.

    ராயபுரம்:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200 விசைப்படகுகள், 800 பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். டீசல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் உள்ளனர்.

    கடந்த மாதம் புரட்டாசி என்பதால் மீன் விற்பனை மந்தமானது. கடலுக்குள் செல்லும் விசைப்படகுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.

    இந்த நிலையில் 2 மாதத்துக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 50 டன் மீன்கள் விற்பனைக்கு குவிந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பியதால் மீன் வரத்து அதிகமாக இருந்தன.

    நவரை, கானாகத்தை, வஞ்சிரம், நெத்திலி, வவ்வால், நண்டு, இறால் மீன்கள் குவிந்து இருந்தன என்றாலும் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது மீன் விலை சற்று அதிகரித்து இருந்தது. ரூ.800-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ரூ.1000 வரை விற்கப்பட்டது. மீன் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-

    காசிமேட்டில் 2 மாதத்துக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் 50 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது. வஞ்சிரம், வவ்வால் மீன், இறால் மற்றும் பெரிய அளவிலான நண்டுகள் உட்பட பல்வேறு வகையான மீன்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றில் வவ்வால், கானங்கெழுத்தி, வஞ்சிரம் ஆகிய மீன்கள் அதிக விலை கொண்டவை. அசைவ பிரியர்கள் மற்றும் ஓட்டல்களுக்கு இவைதான் அதிக அளவில் விரும்பி வாங்கப்படும்.

    மொத்த விற்பனையில் நவரை விலை ரூ. 1,800 ஆக இருந்தது. சில்லரை விற்பனையில் இது கிலோ ரூ.180-க்கு விற்கப்பட்டது. வரும் நாட்களில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிக வகை மற்றும் அதிக அளவில் மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்

    • மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ் கட்டிகள், மீனவர்கள் தங்கி மீன் பிடிப்பதற்கு தேவையான ரேசன் பொருட்கள் உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் ஒரு விசைப்படகு ஒரு முறை சென்று வர ரூ. 5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை தேவைப்படுகிறது.
    • தற்போது டீசல் விலை உயர்வு மற்றும் பல நேரங்களில் குறைந்த அளவு மீன்களே கிடைப்பதால் விசைப்படகு மீனவர்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    ராயபுரம்:

    காசிமேடு மீன் பிடித்துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

    டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக 30 சதவீத விசைப்படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றன. 70 சதவீத விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 15 முதல் 20 நாட்கள் வரை தங்கி மீன் பிடிப்பது வழக்கம். இதற்கு 6500 முதல் 8000 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ் கட்டிகள், மீனவர்கள் தங்கி மீன் பிடிப்பதற்கு தேவையான ரேசன் பொருட்கள் உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் ஒரு விசைப்படகு ஒரு முறை சென்று வர ரூ. 5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை தேவைப்படுகிறது.

    தற்போது டீசல் விலை உயர்வு மற்றும் பல நேரங்களில் குறைந்த அளவு மீன்களே கிடைப்பதால் விசைப்படகு மீனவர்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    இதனால் விசைப்படகு மீனவர்கள் நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார்கள். எனவே மானிய டீசலை கூடுதலாக வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    தற்போது குறைந்த அளவு விசைப்படகுகள் கடலுக்குள் செல்வதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக மீன்களின் விலையும் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக காணப்படுகிறது.

    இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் விஜேஷ் என்பவர் கூறியதாவது:-

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது கடுமையான டீசல் விலை ஏற்றத்தினால் தொடர்ந்து இந்த மீன் பிடி தொழிலில் ஈடுபட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

    மீன்பிடி தொழில் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மீனவர்களுக்கு மானிய விலை டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காசிமேடு மீனவர்கள் கூறும்போது, சிறிய வகை மீன்களே வலைகளில் சிக்குவதால் பெரிய வருமானம் ஈட்ட முடியாத நிலை உள்ளது. குறைந்த விலைக்கு இந்த சிறிய வகை மீன்களை ஆந்திராவில் உள்ள இறால் பண்ணைக்கும் சென்னையை சுற்றி உள்ள புறநகர் பகுதியில் உள்ள கோழி பண்ணைக்கு தீவனத்துக்காக அனுப்பி வருகிறோம்.

    ஆகஸ்ட், செப்டம்பர் காலங்களில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் கடலுக்குள் செல்ல முடியாமல் உள்ளோம். மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு எங்களுக்கு உதவ வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலை உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.

    ×